Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Quotable Quotes Part II

$
0
0
#1215 to #1219

#1215. கற்பனைக்கு எட்டாதவள்

கலந்துநின் றாள் கன்னி காதல னோடும்
கலந்துநின் றாளுயிர் கற்பனை யெல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்க ளெல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாமே.

மூலாதாரத்தில் உருத்திரனுடன் குண்டலினி சக்தியாகப் பொருந்தி நிற்பாள்.
சீவராசிகளின் கற்பனைகளுக்கு எல்லாம் அவளே காரணமாக நிற்பாள்.
கலைகளிலும், கலை ஞானங்களிலும் அவளே கலந்து நிற்பாள்.
காலத் தத்துவத்துடன் அவள் பிரியாமல் கலந்து நிற்பாள்.

#1216. மாலினி என்னும் பாலினி


காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்,
மாலினி, மாகுலி, மந்திர சண்டிகை,
பாலினி, பாலவன் பாகம்அது ஆமே.

காலத் தத்துவமாக இருப்பவள்; சீவர்களுக்கு அனேக அனுபவங்களைத் தருபவள்; அன்பர்களுக்கு அவர்கள் விரும்பும் பொருளைத் தந்து அனுகூலம் செய்பவள்; பிரிவில்லாத கூட்டணி அமைப்பவள். மாலின் தங்கையாகிய மாலினி, மூலாதாரத்தில் இவள் குண்டலினி; சண்டிகை மந்திரத்தில் விளங்குபவள்; சீவர்களைக் காக்கும் பாலினி. அவள் பால் வண்ணச் சிவபெருமானின் ஒரு பாகம் ஆவாள்.

#1217. சக்தியின் அழகிய வடிவம்


பாகம் பராசத்தி, பைம் பொன் சடைமுடி,
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோகமுகம் ஐந்து, முக்கண் முகந்தொறும்,
நாகம் உரித்து நடம் செய்யும் நாதர்க்கே.

சிவபெருமானின் உடலில் ஒரு பாகம் ஆவாள் பராசக்தி. பொன்னிறக் கதிர்களே இவள் தலை முடி. உடல் ஒன்று எனினும் திண்ணிய புஜங்கள் பத்து, அழகிய முகங்கள் ஐந்து, ஒவ்வொரு முகத்திலும் கண்கள் மூன்று. இருட்டைப் பிளந்து கொண்டு பிரணவத்தில் ஒளிரும் சிவபெருமானுக்கு இவள் இடப்பாகம்.

#1218. ஆதியும் அவளே அந்தமும் அவளே


நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடி நின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள; அவை
வேதனும் ஈர் ஒன்பதின்மரும் மேவி நின்று
ஆதியும் அந்தமும் ஆகி நின் றாளே.

ஆன்மாவும் முப்பத்தாறு தத்துவங்களும் ஒன்றாகக் கூடி நின்று செயல்படுகின்றன. அந்தக் கூட்டம் ஐந்து ஐந்தாக சேர்ந்து கொண்டு ஐந்து கூட்டங்களாக விளங்கும். வேதனும் பதினெட்டு கணத்தவரும் மேவி நின்றிடத் தேவி ஆதியும் ஆனாள்! அவளே அந்தமும் ஆனாள்!

ஐந்து கூட்டங்கள்
ஐந்து :
1. பஞ்ச பூதங்கள்
2. பஞ்ச கர்மேந்திரியங்கள்
3. பஞ்ச ஞானேந்திரியங்கள்
4. ஐந்து தன்மாத்திரைகள்
5. கலை, காலம், நியதி, மாயை, புருடன் என்னும் ஐந்து.


#1219. ஆயிழையுடன் ஆகி நின்றான்


ஆகின்ற நாள் கலை ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில், ஆருயிராம் அவள்;
ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே.


ஆறு ஆதாரச் சக்கரங்களில் உள்ள ஐம்பத்தொரு எழுத்துக்களிலும் பராசக்தியின் சக்தி பொருந்தி உள்ளது. அந்த எழுத்துக்களின் உயிராக உள்ளவள் சக்தி. இங்ஙனம் எழுத்துக்களுடன் கலந்து நிற்பவளுடன் கலந்து பொருந்தி நின்றான் சிவபெருமான்.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles