Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Quotable Quotes Part II

$
0
0
#892 to #895

#892. சிவாய என்றிருப்பதுவே ஆனந்தம்

ஆனந்தம் மூன்றும், அறிவு இரண்டு, ஒன்று ஆகும்;

ஆனந்தம் ‘சிவாய’ ; அறிபவர் பலர் இல்லை;
ஆனந்தமோடும் அறிய வல்லார்கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.

‘அ ‘, ‘உ ‘ , ‘ம’ என்ற மூன்றும் ஆனந்தம் ஆகும். விந்து நாதம் இவையிரண்டும் அறிவு ஆகும். இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து பிரணவம் என்ற ஒன்றாகும். ‘சி ‘என்னும் சிவனை ‘நம’ என்பதுடன் பொருத்தாமல் ‘வாய’ என்று சக்தியால் ஆன்மாவிடம் பொருத்தினால் சிவானந்தம் உண்டாகும். இந்த உண்மையைப் பலரும் அறிவதில்லை! இந்த உண்மையை அறிந்து கொண்டவர்களுக்குச் சிவன் ஆனந்தக் கூத்தன் என்ற உண்மை விளங்கும். அவன் நிகழ்த்தும் ஆந்தக் கூத்தும் புலப்படும்.

#893. பயன் விந்து நாதமே ஆகும்!


படுவது இரண்டும் பலகலை வல்லார் ;

படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள் ;
படுவது சங்காரத்தாண்டவப் பத்தி;
படுவது கோணம் பரந்திடும் வாறே.

பல நூல்களைக் கற்று தேர்ந்தவர்கள் விந்து, நாதம் இவற்றைப் பெறுவர். பிரணவம் ஆகிய ஓங்காரம் அல்லது திரு ஐந்தெழுத்தாகிய ‘நமசிவாய’ இவற்றைக் கொண்டும் நாதம், விந்து விளங்கும் குருமண்டலத்தை அடைய முடியும். இதை விளக்குவது ஈசனின் சங்காரத் தாண்டவம் ஆகும். அது சஹஸ்ர தலத்தில் விந்துத் திரி கோணம் என்ற பெயரில் விரிந்து பரந்து உள்ளது.

விளக்கம்
பிரணவ யோகத்தால் நாதம் விந்து விளங்குவது குருமண்டலதில். பஞ்சாக்ஷர யோகத்தால் விளங்குவது ‘சிவாய’ என்னும் சக்தி மண்டலம். செபம் அற்ற போது இந்தச் சக்தி மண்டலம் விந்து நாதமாக ஆகிவிடும். இரண்டு யோகங்களுக்
கும் பயன் ஒன்றே. அதுவே விந்து நாதத்தைப் பெறுவது.

#894. பொதுச் சபையும் சிவமும்


வாறே சதாசிவ மாறுஇலா ஆகமம்;

வாறே சிவகதி வண்துறை; புன்னையும்;
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொது ஆகும் மன்றின் அமலமே.

சதாசிவனால் அளிக்கப்பட்ட ஆகமம் சிவ நெறிக்கு மாறாத வேத நெறியாகும். வளமை மிகுந்த இவற்றை அடைந்தால் பாச நீக்கம் ஏற்படும். இதுவே சைவ ஆகமங்கள் கூறும் உண்மை அறிவு. இதுவே எல்லோருமே சென்று அடையும் பொதுச் சபையாகும். இதுவே குற்றமற்ற சிவன் விளங்கும் இடம் ஆகும்.

#895. சதாசிவம் என்னும் ஆதாரம்


அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம் ;

அமலம் திரோதாயி ஆகும் ஆனந்தமாம்;
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம்
அமலம் திருக் கூத்து அங்கு ஆம் இடம் தானே.

அமலனான சிவனே பதி, பசு, பாசங்களுக்கு ஆதாரம் ஆனவன். அந்தச் சிவமே மாயையின் மறைப்புக்கும், சீவனின் ஆனந்தத்துக்கும் ஆதாரம். ஆணவம் கன்மம், மாயை இவற்றுக்கும் அந்த அமலன் சிவனே ஆதாரம். அந்தச் சிவன் விளங்குகின்ற இடம் சங்காரத் தாண்டவம் நிகழும் இடமாகும்.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles